6 ஜூன், 2012

படைப்புக்கு மரியாதை!

தினமணி தலையங்கம்: படைப்புக்கு மரியாதை! 
First Published : 25 May 2012 01:50:14 AM IST

நடிகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் ஆகியோருக்கு 2012ஆம் ஆண்டு நல்ல காலம் பிறந்திருக்கிறது. படைப்புரிமை சட்டத் திருத்தம்-2012 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முழுமனதாக நிறைவேறியுள்ளது. திரைப்படத் துறையினரின் நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு நிறைவேற்றப்பட்டிருக்கும் சட்டத் திருத்தம் இது. இதில் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரே விஷயம், இந்த நடிகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் தங்கள் படைப்புக்கு உரிமையாளர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பதுதான்.

திரைத்துறையில் ஒரு நடிகர் நடிக்கவும், பாடலாசிரியர் பாட்டு எழுதித் தரவும், இசையமைப்பாளர் இசை அமைத்துக் கொடுக்கவும் அவர்கள் கேட்கும் தொகை தயாரிப்பாளரால் அளிக்கப்பட்டுவிடுவதால், அது தொடர்பாக எந்த உரிமையும் படைப்பாளிகள் அல்லது நடிகர்களுக்கு இல்லை என்பதுதான் படைப்புரிமைச் சட்டம் 1957-ன்படி நடைமுறையாக இருந்தது. இப்போதைய சட்டம் இந்த நடைமுறையில் சிறு திருத்தம் கொண்டுவந்திருக்கிறது. திரைப்படத் தயாரிப்பாளர் அந்த திரைப்படத்துக்கு மட்டுமே உரிமை படைத்தவர். அதே திரைப்படம், வானொலியில், தனியார் அல்லது அரசு தொலைக்காட்சியில், இணையதளத்தில், குறுந்தகடுகள் மூலமாக கேபிள் டி.வி.க்களில், சிறு பகுதியாக அல்லது முழுமையாக அல்லது பாடல் மட்டும் என எந்த வகையில் வெளியானாலும், அதற்கான உரிமத்தொகை (ராயல்டி) பெறுவதற்கு இந்தக் காட்சி, பாடல் அல்லது இசைக்குச் சொந்தக்காரர்கள் உரிமை பெற்றவர் ஆகிவிடுகின்றனர்.

இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், ஒரு கலைஞன் அல்லது கவிஞன், இசைஞன் காலத்தால் கைவிடப்பட்டாலும், அவன் படைப்பு உயிர்ப்புடன் இருக்கும்வரை அக் கலைஞனுக்கு உரிமத் தொகை மிகச்சிறிய அளவாக இருந்தாலும் கிடைத்துக்கொண்டே இருக்கும். அந்தச் சிறந்த கலைஞன் வறுமையில் சாகமாட்டான். திரைப்படத் துறையில் பணியாற்றியவர்களால் எழுத்துலக படைப்பாளிகள் போல, உரிமத்தொகை பெற முடியாமல் இருந்துவந்த நிலைமை இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது.

திரைப்படங்களைப் பொருத்தவரை, அதன் தயாரிப்பாளர் மட்டுமே உரிமை படைத்தவர் என்பதால், அந்தத் திரைப்படம் எத்தனை முறை, எத்தனை தியேட்டர்களில் ஓடினாலும் அவருக்குத்தான் லாபம். அந்தப் படத்தை சில ஆண்டுகள் கழித்து ரீ-பிரிண்ட் போட்டு ஓட்டினாலும் அவருக்கே அந்த லாபம் முழுவதும்.

உதாரணமாக, "கர்ணன்' படத்தை டிஜிட்டலாக மாற்றினாலும் அதன் உரிமை அதன் தயாரிப்பாளருக்கே சொந்தம். அல்லது தயாரிப்பாளரிடமிருந்து உலக விநியோக உரிமையை முழுவதுமாகப் பெற்ற விநியோகஸ்தருக்குச் சொந்தம். இதுதான் இன்று வரை உள்ள நிலைமை. இனி அப்படியல்ல. ஒரு படத்தை டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றினாலும், கருப்பு - வெள்ளைப் படத்தை வண்ணமாக மாற்றினாலும், இணைய தளத்தில் வெளியிட்டாலும், அதாவது, திரைக்கு வெளியே எந்த வடிவம் கொண்டாலும், மாற்றம் பெற்றாலும், அதில் தொடர்புடைய கலைஞர்கள் உரிமத்தொகை பெறும் தகுதியுடைவர்கள் ஆகிறார்கள்.

வானொலி, தூர்தர்ஷனில் ஒலி, ஒளிபரப்பாகும் திரைப்பாடல்கள், ஒலிச் சித்திரம், திரைப்படம், நகைச்சுவைத் துணுக்குகள் குறித்து அகில இந்திய வானொலி நிலையம், தூர்தர்ஷன் ஆகியன கணக்கு வைத்திருக்கின்றன. இவை பயன்படுத்தப்பட்ட மணித்துளிகளுக்கேற்ப, அதன் தயாரிப்பாளர்களுக்குக் காப்பிரைட் போர்டு நிர்ணயிக்கும் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசின் இந்த இரு நிறுவனங்களும் பாராட்டுக்குரியவை.

தனியார் தொலைக்காட்சிகள் ஆதிக்கம் பெருகிய பின்னர், படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் தனியார் தொலைக்காட்சிகளே வாங்கி, அப்படத்தின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் - பாடல், நகைச்சுவைக் காட்சி அல்லது முழு திரைப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும், தங்கள் துணை சேனல்களிலும் ஒளிபரப்பும் புதிய வணிக முறை தோன்றியது.

ஒரு படத்தின் தயாரிப்புச் செலவு ரூ.80 கோடி என்றாலும், அந்தப் படத்தை ரூ.100 கோடிக்கு வாங்கி, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது அவர்களுக்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் பல கோடி ரூபாய். இரண்டு ஒளிபரப்பில் இந்த ரூ.100 கோடியை மீட்டுவிட முடியும். ஆகவே, ஒரு படத்தின் பல காட்சிகளை, பாடலை பலமுறை ஒளிபரப்பி, விளம்பரங்கள் மூலம் பல மடங்கு லாபம் சம்பாதிக்கத் தனியார் தொலைக்காட்சிகளால் முடிந்தது.

தற்போது இந்தச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்திருப்பதன் மூலம், அத்தகைய தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தாங்களே அந்தப் படத்துக்கு உரிமை பெற்றவர்களாக இருந்தாலும்கூட, அதைத் திரையரங்கு அல்லாத வேறு வடிவத்தில் பயன்படுத்துவதால், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் ஆகியோருக்கு உரிமத் தொகை தந்தே ஆக வேண்டும்.

இவ்வாறு திரை அல்லாத வேறு வடிவத்தில் பயன்படுத்தப்படும்போது, அதன் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு ஏற்ப, அதில் தொடர்புடைய கலைஞர்களுக்கும் தரப்பட வேண்டிய உரிமத் தொகையை காப்பிரைட் போர்டு நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நிர்ணயம் செய்யும்போது, தொலைக்காட்சிகளைப் பொருத்தவரை, அக்காட்சிகள் இடம்பெறும் ஸ்லாட்-ன் மொத்த விளம்பர வருவாயையும் கணக்கில்கொண்டு அதற்கேற்ப உரிமத்தொகையை (ராயல்டி) நிர்ணயிக்க வகை செய்தால், கலைஞர்களுக்கு ஓரளவு நியாயமான உரிமத்தொகை கிடைக்கும்.

படங்களை ரீ-மேக் செய்யும்போதும், பாடல்களை ரீ-மிக்ஸ் செய்யும்போதும்கூட தொடர்புடைய கலைஞர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்களின் அனுமதி பெறவும் உரிமத்தொகை தரவும் வேண்டும் என்கின்றது சட்டம். திரைத்துறையினரை மனதில் கொண்டே இந்தச் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்திற்குப் பெயர் வைப்பதிலிருந்து புதிய கதை கருவைத் தேடிப்பிடித்துப் படமாக்குவது வரை, கற்பனை வறட்சி ஏற்பட்டிருக்கிறது. புதிய கதையைப் படமாக்கும் துணிவு இல்லாத போக்கு தலைதூக்கி இருக்கிறது. இந்த நிலையில் இப்படி ஒரு சட்டம் வந்திருப்பது சுயசிந்தனையாளர்களின் திறமைக்குத் தரப்படும் மரியாதை. இருப்பினும் திரைத்துறையினரின் ஒற்றுமை மட்டுமே இந்தச் சட்டத்தை வலுவாக்கும் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

6 மார்ச், 2012

சிறந்த நூலாசிரியர்களுக்குப் பாராட்டு


சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பவித்ரம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சிறந்த அறிவியல் மற்றும் ஆன்மிக தமிழ் நூல்களுக்கு "ராமமூர்த்தி நினைவு விருது' பெற்றவர


சென்னை, மார்ச் 5: சிறந்த நூலாசிரியர்களுக்குப் பாரட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறந்த நூல்களை தேர்வு செய்து அதன் ஆசிரியர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. ஆர்.வி.பதியின் "மனதை மயக்கும் கண்ணனின் கதைகள்', ஜெ. வீரநாதனின் "எளிய தமிழில் இணையத்தை அறிவோம்', பி. முத்துகுமாரசுவாமியின் "நகரத்தார் கோயில்களில் ஒன்பது', வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் "எல்லோருக்கும் எப்போதும் உணவு' ஆகிய நூல்கள் தேர்வு செய்யப்பட்டு நூலாசிரியர்களுக்கு "ராமமூர்த்தி நினைவு' விருதுகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ். ராமநாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி, இந்தியா சிமெண்ட் நிறுவன துணைத் தலைவர் (நிதி) ஹரிஹர சுப்பிரமணியன், பவித்ரம் நிர்வாகி எஸ்.எஸ்.ஆர். ராஜ்குமார், கெüரவ ஆலோசகர் டாக்டர் ஜெ. ஜாய்ஸ் திலகம், நாடக ஆசிரியர் சி.வி. சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






1 பிப்ரவரி, 2012

கணினி வரைகலை - பயிற்சியும் வேலை வாய்ப்பு

கணினி வரைகலை - பயிற்சியும் வேலை வாய்ப்பு

தொடக்கம்


கற்காலத்தில் குகைகளில் வசித்த போதே குகைச் சித்திரங்களாக வரைந்து தகவல் பரிமாற்றத்தை மனித இனம் துவக்கியது. சிந்தனை வளர்ந்து செயலாக மாறியபோது ஏராளமான வெளிப்பாடுகள் கண்டுபிடிப்புகளாகக் கிடைத் தன. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்திய நாகரீகம் முதன்முதலாக குறியீடுகளாக எழுத்துக்களை அறிமுகம் செய்தது.


வளர்ந்த நதிக்கரை நாகரீகங்கள் வாய்வழி ஓசைகளை எழுத்துக்களாக வடிவமைத்தன. எண்ணங்களை எழுத்துக் களாகப் பதிவு செய்ய பனை ஓலை, சுடுகற்கள், பாறைகள், துணி, மரத் துண்டுகள் போன்ற அன்றைய நாட்களில் அருகில் எளிதில் கிடைத்தப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.


சீனர்கள் கண்டுபிடித்த காகிதம் அச்சுக்கலை உருவாகி வளர வழிசெய்து. ஒட்டுமொத்தமாக மரக்கட்டைகளில் செதுக்கப்பட்டு பக்கங்கள் அச்சிடப்பட்டன. 15ஆம் நூற்றாண்டு வரையிலும் புழக்கத்திலிருந்த இந்த முறை, ஜெர்மானிய கலைஞர் ஜேஹன்னஸ் கூட்டன்பர்க் என்பவரின் ஈடுபாட்டால் மாற்றம் அடைந்தது. அவர் கண்டுபிடித்து உலகிற்களித்த பிரித்தெடுத்து அடுக்கும் அச்சுமுறை சுமார் 500 ஆண்டு காலம் அச்சுத்துறைக்கு மிகப் பெரிய உதவியாக அமைந்தது. லெட்டர் பிரஸ் என்று குறிப்பிடப்படும் இந்த அச்சுக்கோர்க்கும் முறை இன்றும்கூட புழக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


கணினியின் வருகை


அச்சுத்துறையில் ஏற்பட்ட மாற்றங்களினால் அதன் மூலம் கிடைத்த புத்தகங்கள் எளிய மக்களையும் சென்றடைந்தது. அதனால் அறிவுப் பரிமாற்றம் விரைவாக நடந்தது; ஆராய்ச்சிகள் பெருகின; அறிவியல் வளர்ந்தது; அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏராளமாக வெளிவந்தன.


கணக்கியலின் வளர்ச்சியால் கணினி இயல் தோன்றியது. மனித அறிவிற்கும் ஆற்றலுக்கும் உதவும் விதமாக கணினி தொழில்நுட்பம் எல்லாத்துறைகளிலும் பரவியது; பலன் தந்தது. 80களின் இறுதியில் டெஸ்க் டாப் பப்ளிஷர் என்ற வகைப்பாட்டில் கணினிகள் அச்சுத்துறைக்கு அறிமுகம் ஆயின.


அச்சுக்கோர்ப்பாளர், அச்சிடுபவர், வரைகலைஞர், வடிவமைப்பாளர், வெட்டி ஒட்டுபவர், பிழை திருத்துநர், ஓவியர் என்று பல்வேறு நபர்களின் கூட்டு முயற்சியாலும், உழைப்பாலும் செய்யப்பட்ட வேலைகள், கணினி வரைகலைஞர் என்ற ஒரே ஒரு நபரால் உருவாக்கப்படும் நிலை ஏற்பட்டது.


வரைகலையில் கணினிகள்


80களில் வெளிவந்த கணினிகளில் கொள்ளவு என்பது வெறும் 80 எம்பியில் மட்டுமே இருந்தன. ஆனால் அவற்றுடன் ஒப்பிடமுடியாத அளவிற்கு இன்று கணினிகள் கொள்ளவிலும், ஆற்றலிலும், செயல்பாட்டிலும், கொடுக்கும் வெளிப்பாடுகளிலும் பெரிய மாற்றங்களுடன் கிடைக்கின்றன.


உடல் போன்று திகழும் கணினிகளுக்கு உயிராக அமைந்துள்ளவை, கண்ணால் பார்க்க முடியாத, தொட்டுணர முடியாத மென்பொருட்களே. இந்த மென்பொருட்களின் தன்மையினாலேயே அச்சுத் துறையில் வடிவமைப்பிற்காக பயன்படுத்தப்படும் கணினிகளுக்கு டெஸ்க் டாப் பப்ளிஷர் என்ற சிறப்புப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் அவை பெரிசனல் கம்ப்யூட்டர் - பீசி என்றே குறிப்பிடப்படுகின்றன.


கணினி வரைகலை


அச்சு, விளம்பரம், பதாகைகள், புத்தகப் பதிப்பு மற்றும் ஒளிப்படத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் அடிப்படையாகத் திகழ்வது வரைகலை வடிவமைப்பாகும். பெரும்பாலும் வெறும் எழுத்துக் களால் உருவாக்கப்படும் புத்தகங்கள் உருவாக்கம் முதல், எழுத்துக்கள், வண்ணங்கள், ஒளிப்படங்கள் போன்றவற்றை பயன்படுத்தி மிகவும் சிக்கலான முறையில் உருவாக்கப்படும் பதாகைகள் வடிவமைப்பு வரையிலும் கணினியும் அதில் நிறுவப்படும் மென்பொருட்களுமே பயன்படுத்தப்படுகின்றன.


காகிதம், அட்டை, வண்ணக்கலவைகள், தூரிகை, எழுதுகோல்கள், கத்தி, கத்தரிக்கோல், அழிப்பான் உள்ளிட்ட வரைகலைக் கருவிகள் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுவிட்டன. இத்தனை கருவிகள் செய்த வேலைகளை கணினியுடன் இணைக்கப்படுகின்ற மவுஸ் என்றழைக்கப்படும் சுட்டுக்கருவிகள் துல்லியமாக செய்து முடிக்க உதவுகின்றன.


கணினி வரைகலை மென்பொருட்கள்


கணினி வரைகலை என்பது பல்வேறு வகைகளில் உள்ளது. புத்தக வடிவமைப்பு என்பது எழுத்துக்கள் அதிகமாகவும குறைவான படங்களுடனும் உள்ளது. புகைப்படத்துறை என்பது இதற்கு எதிர்மறையாக செயல்படுகிறது. அங்கு எழுத்துக்கள் என்பது அரிதாக உள்ளது. பதாகைகள் வடிவமைப்பு என்பதோ எழுத்துக் கள், வண்ணங்கள், கோட்டுப்படங்கள், ஒளிப்படங்கள் என்று பல தரப்படவைகளின் கலவையாக உள்ளது.


இப்படி பலதரப்பட்ட செயல்பாடுகளைக் கொண்டுள்ளதால் கணினி வரைகலையில் பல்வேறு மென்பொருட்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. இன்டிசைன், போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர், கோரல்டிரா என்ற பல்வேறு மென்பொருட்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இவையெல்லாம் விலை கொடுத்து வாங்க வேண்டியவையாகும்.


இவையல்லாமல், இலவசமாக, இவை போன்றே செயல்பாடுகளைக் கொண்ட மென்பொருட்களும் இணையத்தில் கிடைக்கின்றன. தேவையெனில் இவற்றை பதிவிறக்கம் செய்து நமது கணினிகளில் நிறுவி பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேவையும் பயன்பாடும்


எழுத்து என்பதில் புழக்கத்தில் உள்ள எல்லா இடங்களிலும் இன்று கணினி வரைகலை என்பது மிகவும் தேவையான ஒன்றாகிவிட்டது. சிறிய துண்டுப் பிரசுரங்கள், அறிவிப்புகள் முதல் பல நூறு பக்கங்களைக் கொண்ட புத்தகம் வரையிலும் இன்று கணினிகள் வழியாகவே உருவாக்கப்படுகின்றன.


இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அறிவுடன் தொடர்புகொண்ட ஒவ்வொரு இடத்திலும் கணினி வரைகலையின் வெளிப்பாடு உள்ளதைப் பார்க்க முடிகிறது. இதனால் இதன் பயன்பாடு என்பது தவிர்க்க இயலாதவை என்ற பட்டியலில் சேர்ந்துவிட்டது என்றும் கூறலாம்.


பயிற்சி


இந்தக் கணினி வரைகலை என்பது பல்வேறு தரத்தில் உள்ளது. அடிப்படை என்று பார்த்தால் கணினிக்குள் எழுத்துக்களை உள்ளீடு செய்யும் செயல் என்பதாகும். இதற்குக் குறிப்பிட்ட மொழியில் தட்டச்சு செய்யத் தெரிந்திருந்தாலே போதும். அதே சமயம் சிக்கலான வடிவமைப்பைக் கொண்டுள்ள வேலைகளை எடுத்துப்பார்த்தால், அவற்றில் எழுத்துக்களை உள்ளீடு செய்வது மட்டுமல்லாது வேறு பல செயல்பாடுகளும் இருப்பதை அறியலாம்.

கற்பனை வளத்துடன், எழுத்துரு அறிவு, வண்ணங்கள் மற்றும் அவற்றின் கலவை முறைகள் பற்றிய அறிவு, வடிவமைப்பு, படங்கள் மற்றும் ஒளிப்படங்கள் பற்றிய அறிவு போன்றவை அந்தக் கணினி வரைகலை வடிவமைப்பாளருக்கு இருந்திருப்பதை அறியலாம்.
ஆம், தட்டச்சு என்பதுடன் ஈடுபாட்டுடன் கூடிய கற்பனை வளமும், கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தால் கணினி வரைகலையில் சாதனைகள் புரியலாம்.

இந்தக் கணினி வரைகலையில் பயிற்சி எடுப்பதற்கு, கல்வியறிவு - அதாவது பள்ளி, கல்லூரிகளில் படித்துப் பெற்ற அறிவு - என்பது வரைமுறைக்கு உட்பட்டது அல்ல. எழுதப் படிக்கத் தெரிந்திருந்தாலே போதும்.


ஆங்கில அறிவும், கணினித் தொழில்நுட்பமும் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அடிப்படை ஆங்கிலச் சொற்களும், ஆங்கில எழுத்துக்களும் படிக்கத் தெரிந்திருந்தால் மட்டும் போதும். இதுவும் வரைகலைஞர் பயன்படுத்தும் மென்பொருளின் அடிப்படையில் மட்டுமே தேவையாகும்.


கணினி தொழில்நுட்பம் என்பதும் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. சமையல் செய்ய விரும்புவர்க்கு, விவசாயமோ, விவயசாத் தொழில்நுட்பமோ தெரிந்திருக்க வேண்டியதில்லை அல்லாவா! விளைந்த பொருட்களின் தன்மையும் பயன்பாடும் பற்றி அறிந்திருந்தால் போதும் தானே.


வேலை வாய்ப்புகள்


கட்டுப்பாடற்ற சம்பளத்தைக் கொடுப்பதாகக் கூறப்படும் கணினித்துறைக்குள் நுழைவதற்கு அத்தனை பேரும் விரும்புகின்ற காலம் இது. ஆனால் கணினித் தொழில்நுடப் பிரிவுகளில் மேல்நிலை படிப்பு முடித்தவர்கள் அனைவருமே அந்த உச்சியை அல்ல, துவக்கத்தைக்கூட அடைய முடிவதில்லை.
ஆனால் அந்த உச்சியை அடைந்துள்ள மிகக் குறைந்த சதவீத மக்களைப் பார்த்து எல்லோரும் ஆசைப்படுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
கணினியில் மென்பொருள்துறை தவிர்த்து மேலும் பல பகுதிகள் உள்ளன. அவற்றில் ஒன்றான இந்த கணினி வரைகலைப் பகுதியில் தேவையும் வாய்ப்பும் மிக அதிகமாகவே உள்ளது.

தமிழ் மொழியில் தட்டச்சு மட்டுமே பழகியுள்ளவர்கள்கூட இந்தத் துறைக்குள் எளிதாக நுழைந்து விடலாம். சரியாகச் சொல்லப்போனால் இவர்களுக்கு வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளது. பிறகு தங்களது முழுமையான ஈடுபாட்டுடன் இதில் சிறப்பாக செயல்படலாம்.

பெருநகரங்களில் மட்டுமல்லாது சிறிய கிராமங்களிலும் கணினி வரைகலைஞர்களின் தேவை அதிகமாகவே உள்ளது. கிராமங்களில் இதனை பயிலுபவர்களுக்கு அங்கேயே வேலை வாய்ப்பு கிடைக்கிறது; சொந்தமாக தொழில் துவங்கலாம். அல்லது அருகில் உள்ள நகரங்களில் வேலை கிடைக்கிறது.

பயிலும் முறைகள்


இந்தக் கணினி வரைகலையை மிகவும் எளிதாகப் பழக முடிகிறது. அதற்கான வழிமுறைகள் :

1. தமிழ் தட்டச்சு மட்டும் அறிந்துள்ள நிலையில் தரவு உள்ளீடு செய்யும் பணியில் சேர்ந்து, படிப்படியாக கணினி வரைகலையைப் பழகிக் கொள்ளலாம். இதற்கு வேலை செய்யும் இடத்தைப் பொறுத்து 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரையிலும் ஆகலாம்.

2. கணினி வரைகலையைப் பயிற்றுவிக்கும் தரமான பயிலகத்தில் சேர்ந்து பழகிக் கொள்ளலாம். எனினும் சொல்லிக் கொடுக்கும் பயிலகத்தின் தரத்தைப் பொறுத்து பயிலுபவரின் செயல்பாடுகள் அமையும். 3 முதல் 6 மாதங்களுக்குள் தேர்ச்சி பெறலாம்.

3. எளிய தமிழில் கணினி வரைகலையைச் சொல்லித்தரும் குறுவட்டுக்கள் கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்திப் பழகலாம். பயிலுபவரின் ஈடுபாட்டைப் பொறுத்து கால அளவு மாறுபாடு அடைகிறது.

4. எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் மூலமாகவும் கணினி வரைகலையைப் பயிலலாம். இதுவும் மேலேச் சொன்னபடி காலவரையறைக்கு உட்பட்டது அல்ல.

பயில வேண்டும் என்ற ஆர்வம், முயற்சி இருந்தால் இந்த கணினி வரைகலையைப் பயின்று விடலாம். இன்று நீங்கள் படிக்கும் இந்தப் புத்தகத்தை உருவாக்கியதும் சில கணினி வரைகலைஞர்களின் உழைப்புதான் என்பதை அறிவீர்களா!

தயக்கம் வேண்டாம்


கணினி தொழில்நுட்பம் என்றதும் நம்மவரிடையே ஒரு தயக்கம் உள்ளது. நேரடியாக கணினி தொழில்நுட்பம் அல்லாமல், கணினியை பயன்படுத்தி செயல்படும் கணினி வரைகலை போன்ற பல துறைகள் உள்ளன. எனினும் இந்த கணினி வரைகலையைப் பொறுத்தமட்டில், விருப்பத்துடன் கூடிய எவர் வேண்டுமானாலும் நுழையும் அமைப்புடன் திகழுகின்றது; அத்துடன் ஈடுபாட்டுடன் செயல்படுபவர்களுக்கு உறுதியான வேலை வாய்ப்பையும் அதனைத் தொடர்ந்து சுயமாகத் தொழில் தொடங்கும் நல்ல வாய்ப்பையும் தருகின்றது.

10வது, +2 படித்தவர்கள் மட்டுமல்ல பட்டதாரிகளும்கூட இந்தப் பகுதியில் சிறப்பாக செயல்பட முடிகிறது.

தமிழ் மட்டுமே அறிந்த நாம் கணினி வரைகலையில் வெற்றி பெற முடியுமா? என்ற தயக்கமின்றி துவங்குங்கள். தொழில்நுட்பமும், அறிவியலும், வாணிபமும் தமிழருக்குப் புதியதன்று. மற்றவர்கள் கற்கத் துவங்கியபோது நாம் கற்றுக் கொடுக்கும் நிலையிலேயே இருந்துள்ளோம். எந்தத் தொழில்நுட்பத்தையும் எளிதில் கற்கும் ஆற்றல் நமக்குண்டு. அத்துடன் 64 கலைகளை வளர்த்துவரும் நாடு இது. இந்தக் கலையையும் சிறப்பாக வளர்த்து வருகிறது.

விருப்பத்துடன் வாருங்கள்; சிறப்பாக செயல்பட்டு வளரலாம்; வாழ்த்துக்கள்.


ஜெ. வீரநாதன்
பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்

மின்னஞ்சல் : veeranathan@yahoo.com

நன்றி : தமிழர் கண்ணோட்டம், பொங்கல் மலர், ஜனவரி 2012

10 நவம்பர், 2011

ஏன் இன்டிசைன்...?

ஏன் இன்டிசைன்...?

கணினி வரைகலையில் குறிப்பாக புத்தக வேலைகளுக்கான பக்க வடிவமைப்பிற்காக பயன்பாட்டில் இருந்துவந்த, தற்போதும் பயன்படுத்திக் கொண்டுள்ள அடோபி நிறுவனத்தின் பேஜ்மேக்கர் மென்பொருளில், ஏராளமான குறைபாடுகள் உள்ளன. இவற்றையெல்லாம் களைந்து, இன்னும் அதிகமான வசதிகளுடன் உருவாக்கப்பட்டதே இந்த இன்டிசைன் மென்பொருளாகும்.

பக்க வடிவமைப்பு மட்டுமல்லாமல், வெக்டார் வகையிலான படங்களையும் உருவாக்க இந்த இன்டிசைன் மென்பொருளில் பல வசதிகள் உள்ளன. அத்துடன் தலைப்பு எழுத்துக்களை அழகுபடுத்துவது, பின்புலனாக வண்ணங்களை நிறுத்துவது உள்ளிட்ட ஏராளமான, வரைகலை அம்சங்கள் இன்டிசைனிலேயே கொடுக்கப்பட்டுள்ளன.

அச்சுத்துறைக்கென்றே, அச்சுத்துறைக்குத் தேவையான, அதில் பயன்படுத்தப்பட்டுவரும் பல்வேறு அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளதாகவும் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக அச்சுத்துறையில் தற்போது புழக்கத்தில் உள்ள பாலிமாஸ்டர் வேலைகளிலிருந்து கம்ப்யூட்டர் டூ பிளேட் வகையான வேலைகள் அல்லாமல், நேரடியாக கம்ப்யூட்டர் டூ பிரிண்ட் தருகின்ற டிஜிட்டல் பிரிண்டிங் வரையிலான வேலைகளும் செய்யப்படுகின்றன. இவை அனைத்திற்கும் ஏற்ற பல செயல்பாடுகள் இன்டிசைனில் உள்ளன.

அத்துடன் தற்போது பெரிய அளவில் பேசப்படுவதுடன், செயல்பாட்டிலும் கொண்டுவரப்பட்டுள்ள ஈ-பப்ளிகேஷன் எனப்படும் மின் பதிப்பு முறைக்குத் தேவையான மின்னூல்களை (-புக்ஸ்) உருவாக்குவதற்கு வேண்டிய பல்வேறு வசதிகள் இந்த இன்டிசைனில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த மின்னூலுக்கு அடிப்படையான போர்டபிள் டாக்குமென்ட் ஃபார்மேட் எனப்படும் பீடிஎஃப் வகை கோப்புகளை உருவாக்குவது என்பது இன்டிசைனில் மிகவும் எளிமைபடுத்தப்பட்டுள்ளது. அதற்காக சிறப்புக் கட்டளைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனந்தவிகடன் குழுமத்தின் அனைத்து இதழ்கள் மற்றும் குமுதம் உள்ளிட்ட பல்வேறு வார இதழ்களும், தினகரன், தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களும் தற்போது இன்டிசைனை பயன்படுத்தியே தங்களது வடிவமைப்பை செய்து முடிக்கின்றனர். மேலும் சென்னையில் கணினி வரைகலை வடிவமைப்பாளர்களிடையே இந்த இன்டிசைன் பெரிய அளவில் புழக்கத்தில் உள்ளது.

2000ஆவது வருடத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இன்டிசைனின் 1வது பதிப்பைத் தொடர்ந்து தற்போது 6வது பதிப்பு இன்டிசைன் சிஎஸ்4 என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது. அத்துடன் இதன் 10ஆவது ஆண்டு நிறைவில், 12-04-2010 அன்று 7வது பதிப்பு சிஎஸ் 5 என்றும் வெளியிடப்பட்டு இப்போது சிஎஸ்6 பதிப்பு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அச்சுத்துறைக்கான பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ள இந்த இன்டிசைனை முறையாக பயின்று பலனடைவதற்காகவே நமது பயிலகம் மூலம் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

இந்தப் பயிற்சியின் முடிவில், தற்போது பயன்பாட்டில் உள்ள பேஜ்மேக்கர் மற்றும் கோரல்டிரா ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து இன்டிசைனை மட்டும் பயன்படுத்த முடியும்.

தற்போது பயன்பாட்டில் உள்ள மென்பொருளில் உள்ள குறைபாடுகள் :

- அதிக பக்கங்கள் உள்ள வேலையை சேவ் செய்து வைத்திருந்தால், மறுபடியும் துவக்கம்போது, தொல்லை தருகிறது.

- தானாக பக்க எண்கள் அமைப்பு கொடுப்பது கடினமானது.

- ஒரே வேலையில் வேறு வேறு தொடர்ச்சியான பக்க எண்கள் வரவழைப்பது இயலாது.

- ஒரு முறை நிறுத்திய படத்தை மாற்றுவதற்கு, அல்லது மாற்றங்கள் கொடுப்பதற்கு அதனை டெலிட் செய்துவிட்டு மீண்டும் இம்போர்ட் செய்தே நிறுத்த வேண்டும்.

- நமது வேலையில் உள்ள தவறுகளை அறிய முடியாது.

- வேரியபிள் டேட்டா என்பது மிகவும் குறைவான அளவிலேயே செயல்படுகிறது. இதனால் அடையாள அட்டை போன்ற புகைப்படங்களை இணைக்கும் வேலைகளைச் செய்ய முடிவது இல்லை.

- திரையில் காட்டப்படும் வண்ணங்களும் அச்சில் கிடைக்கும் வண்ணமும் வேறுவேறாக உள்ளன.

- -புக் எனப்படும் மின்னூல் உருவாக்கத்திற்குத் தேவையான பல வசதிகள் கிடையாது. பீடிஎஃப்பாக மட்டும் மாற்ற முடியும். அனிமேஷன் வசதிகள் கொடுக்க முடியாது.

- இணையப் பக்க வடிவமைப்பிற்காக செயல்படுவது சிரமம்.

- ஆட்டோபேக்கப் மற்றும் பேக்கப் நடக்கும்போது வேறு செயல்களைச் செய்ய முடியாது.

- பேக்கப் நடக்கும்போது மின்தடை ஏற்பட்டால் ஃபைலே கரெப்ட்டாகிவிடுவதும் உண்டு. அதாவது செய்து வைத்த வேலை முற்றிலுமாகக் கொட்டுப் போகிறது.

- இரவு வேலையை முடித்துவிட்டு மறுநாள் காலை ஃபைலைத் துவக்கினால் வெள்ளையாக ஒரு பக்கம் மட்டுமே காட்டப்படும் நிலை பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஃபைல் சைஸ் அதே அளவு உள்ளது.

- வேலை செய்து கொண்டிருக்கும்போது டெர்மினேட் ஆனால், அதுவரை செய்தவை டெலிட் ஆகிவிடுகின்றன.

இதுபோன்ற தொல்லைகள் எதுவும் இன்டிசைனில் கிடையாது.

குறிப்பு : நாம் இன்டிசைனை சந்தைப்படுத்துவதற்காகவோ, விளம்பரப்படுத்து வதற்காகவோ அதற்குப் பரிந்து பேசவில்லை. எங்களது புத்தகங்கள் தயாரிப்பு மற்றும் பிற வடிவமைப்புகளை இன்டிசைனிலேயே தயாரிக்கின்றோம். எளிமையாகவும் முழுமையாகவும் உள்ளது. யாமறிந்த மென்பொருட்களில் இன்டிசைனைப் போல எளிதானதெங்கும் காணோம் என்பதாலும், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கத்தினாலும் இதனைக் கொடுக்கின்றோம்.

வடிவமைப்பாளர்கள் கிடைக்காத இந்த நாட்களில், உரிமையாளர்கள் எளிதாக பயிலுவதற்கு இதுவே மிகப் பொருத்தமான மென்பொருளாகும்.

29 செப்டம்பர், 2011

பார்கோடு - BarCode


பார்கோடு

அடிப்படைச் செய்திகள்


வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் வெளிப்பாடுதான் “பார்கோடு” எனப்படும் வசதியாகும். நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கையும், அளவும் அதிகரித்துவரும் இந்த நாட்களில், சந்தையில் அவற்றை கையாளும் ஆட்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது. அதாவது விற்பனை நிலையங்களில் வேலைபார்க்க சரியான எண்ணிக்கையில் ஆட்கள் கிடைப்பது இல்லை. ஆனால் பரிமாற்றம் மட்டும் அதிகரித்து வருகிறது. எனவே குறைவான எண்ணிக்கையில் உள்ள மனித சக்தியை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இதனால் மனித சக்திக்குத் துணையாக கணினி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

கணினி தொழில்நுட்பம்


ஒரு பொருளின் அளவு, விலை மற்றும் கையிருப்பு ஆகியவற்றை கணினியில் உட்செலுத்தி வைத்துக் கொண்டு தேவையானபோது மட்டும் அதனை பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. வடிவமைப்பில் - குறிப்பாக பேக்கேஜிங் துறைக்கான வடிவமைப்பில் - இந்த பார்கோடுகளை பற்றி அறிந்திருப்பதும் பயன்படுத்துவதும் அவசியமாகிறது. பார்கோடுகளை உருவாக்குவதற்கென தனியான மென்பொருளும், அவற்றை உருவாக்கிக் கொடுக்கும் சேவை நிறுவனங்களும் இருக்கின்றன. பொதுவாகத் தயாரிப்பாளர்கள் இவர்களிடமிருந்தே பார்கோடுகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். எனினும் கணினி வடிவமைப்பில் பெருமளவு பயன்படுத்தப்படும் கோரல்டிரா மென்பெருளிலும் இந்த பார்கோடை உருவாக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் முறையாக உங்கள் கம்ப்யூட்டரில் கோரல்டிரா மென்பொருளை பதிவு செய்யும் பொழுது முழுமையாக, இந்த பார்கோட் பகுதியையும் சேர்த்து பதிவு செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் இந்தக் கட்டளை மங்கிய நிலையிலேயே காணப்படும்; செயல்படாது.



பார்கோடு உருவாக்கம்


இந்தக் கட்டளையை செலக்ட் செய்தவுடன் முதல் டயலாக் பாக்ஸ் வருகிறது
பாகம் 1 ஆகக் காட்டப்பட்டுள்ள பகுதியில் உள்ள ட்ராப் டவுன் லிஸ்ட்டில் பல முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் தேவையான முறையை (Industry Standard Format) செலக்ட் செய்யுங்கள். (இந்தியாவில் பொதுவாக EAN-8, EAN-13 ஆகிய இரண்டு முறைகளே பெரும் அளவில் பயன்படுகின்றன. அதாவது எட்டு இலக்கங்கள் அல்லது 13 இலக்கங்கங்களை உடைய குறியீட்டு எண்களை மட்டுமே இங்கு பயன்படுத்துகின்றோம். எனினும் இதில் கொடுத்துள்ள முறைகள் பற்றிய தெளிவான விவரங்களை அறிந்து பயன்படுத்த வேண்டும்.) இங்கு EAN-8 என்ற முறையை செலக்ட் செய்துள்ளோம். இந்த முறையில் கொடுக்க வேண்டிய எண்களை பாகம் 2ல் உள்ள டெக்ஸ்ட் பெட்டிகளில் கொடுக்கவும். தவறாகக் கொடுத்தால் எச்சரிக்கை வந்து நிற்கும்.
பாகம் 3ல் உள்ள சாம்பிள் ப்ரீவ்யூ பெட்டியில் நாம் செலக்ட் செய்துள்ள முறையின் மூலம் கிடைக்கவுள்ள பார்கோடின் வடிவம் காட்டப்படுகிறது. இதனை ஒப்புநோக்கி வேறு வடிவம் தேவையெனில் பாகம் 1ல் வேறு முறையை செலக்ட் செய்து கொள்ளவும். நெக்ஸ்ட் பட்டனை செலக்ட் செய்தால் அடுத்தடுத்து டயலாக் பாக்ஸ்கள் வருகின்றன.
இவற்றில் அச்சிடும் பொழுது இருக்க வேண்டிய தரம் மற்றும் பிற தன்மைகள் பற்றிய விவரங்கள் கேட்கப்படுகின்றன. பார்கோடுகள் பற்றிய முழு செய்திகளையும் அறிந்து கொண்டு, வேலையின் தன்மைக்கு ஏற்ப இதில் உள்ள வசதிகளை மாற்றிக் கொடுத்து கடைசியாக வருகின்ற டயலாக் பாக்ஸில் ஃபினிஸ் கொடுத்து முடித்தால், குறிப்பிட்ட முறையில் உங்களது தேவைக்கேற்ற பார்கோடு நிறுத்தப்படுகின்றது. இதனை அளவில் மாற்றம் செய்து பயன்படுத்தலாம். பார்கோடுகள் அவற்றை படித்து அறிகின்ற பார்கோடு ரீடர்களில் சிறப்பாக செயல்பட, தரம் முக்கியமாக தேவைப்படுகிறது. தரம் குறைவானால் தவறான தகவல்கள் தரப்பட்டுவிடும். பார்கோடுகள் பொதுவாக இடமிருந்து வலமாகவே பார்கோடு ரீடர்களால் படிக்கப்படுகின்றன. எனவே பார்கோடுகள் உயரமாக இருக்க வேண்டியது இல்லை. அதற்காக நாமாக அகலத்தை பெரிதுபடுத்துவதும் கூடாது. முழுமையான விவரம் அறிந்து செயல்படவேண்டிய மிக முக்கியமான பகுதி.



பல்வேறு வகையான பார்கோடுகள்

சிலவகையான பார்கோடுகளை கீழே காண்க.
EAN-8 (7 எண்களை நாம் கொடுக்க, 8வது எண் தானாகக் கொடுக்கப்படுகிறது.)
EAN-8 (கூடுதலாக 5 எண்கள் கொடுக்கலாம்.)
EAN-13 (12 எண்களை நாம் கொடுக்க, 13வது எண் தானாகக் கொடுக்கப்படுகிறது.)

EAN-13 (கூடுதலாக 5 எண்கள் கொடுக்கலாம்.)

ISBN 978 prefix (உலகளவிலான புத்தக எண் - 978 என்பது கொடுக்கப்பட்ட நிலையில்)

ISBN (உலகளவிலான புத்தக எண் மட்டும்)
இப்படி பலவகையான பார்கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர இந்திய அஞ்சல் துறையாலும் பார்கோடு பயன்படுத்தப்படுகிறது. அஞ்சல் குறியீட்டு எண்ணை விரைவாகக் கண்டுபிடித்து கடிதங்களை பிரித்தெடுக்க இது உதவுகிறது.

ஜெ.வீரநாதன்

balajiicg@yahoo.com

15 மார்ச், 2011

இன்டிசைன் - ௨ நாள் பயிற்சி வகுப்புகள்

கணினி வரைகலையில் பக்க வடிவமைப்பிற்காக பயன்படுத்தப்படும் அடோபி நிறுவனத்தின் இன்டிசைன் மென்பொருளைப் பழகுவதற்காக இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.



கோய்புத்தூர், பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் நடத்திய இதுபற்றிய மேலும் விவரங்களுக்கு (கீழே உள்ள தொடர்பில் சொடுக்கி) வருகைதர வேண்டுகிறோம் :

14 டிசம்பர், 2010

இணையம் vs அச்சு

வண்ணங்கள், வடிவமைப்பைப் பொறுத்தவரை
இணையம் வேறு; அச்சு வேறு!
கணினி, கணினி தொழில்நுட்பம், கணினி வரைகலை (கம்ப்யூட்டர் கிராபிக் டிசைனிங்), இணையம் (இன்டர்நெட்) - என்று எல்லாம் மிகவும் எளிமையாகிப் போன காலகட்டமான இன்றைய நாட்களில், இவற்றை பயன்படுத்து வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட சிறப்பு வல்லுனர்கள் கணினி வரைகலை மற்றும் இணைய பயன்பாட்டை பெரிய அளவில் பயன்படுத்துவோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.

தங்களது பாடத்தில் உள்ள திட்ட அறிக்கையை தயாரிப்பது, கல்வி நிலைய விழாக்களுக்குத் தேவையான பதாகைகளை (ஃபிளெக்ஸ் பேனர்கள்) உருவாக்குவது, விழா மலர்களை தயாரிப்பது போன்ற நேரங்களில் மாணவர்கள் கணினி வரைகலையை பயன்படுத்தத் தவறுவதில்லை. தாங்கள் எழுதியுள்ள புத்தகத்தை அச்சிற்குத் தயாரிக்க மற்றவர்கள் பெரிய அளவில் கணினி வரைகலையைப் பயன்படுத்துகின்றனர்.

பயன்படுத்தப்படுபவை

கணினியில் உருவாக்கப்படும் வரைகலை வேலைகளில் எழுத்துருக்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவையே பெரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன. மாணவர்கள் உள்ளிட்ட மேலே நாம் குறிப்பிட்டவர்கள், இந்த வடிவமைப்பிற்குத் தேவையான பெரும்பாலானவற்றை இணையத்தின் வழியேதான் பெறுகின்றனர். குறிப்பாக புகைப்படங்களை (இமேஜஸ்) இவர்கள் இணையத்தின் வழியேதான் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர். இதில் தவறில்லை. ஆனால் தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ளாமல் இவர்கள் , அதுவே சரியானது என்று வாதிடுவதுதான் வருத்தத்திற்குரியதாகும்.

இரண்டாவதாக இவர்கள் பயன்படுத்தும் எழுத்துருக்கள் (ஃபான்ட்ஸ்); குறிப்பாக தமிழ் எழுத்துருக்கள் இலவசமாகக் கிடைக்கின்றன என்பதற்காக இவற்றை எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியாது என்பதை இவர்கள் அறியாமலிருக்கின்றார்கள்.

மூன்றாவதாக இவர்களது வடிவமைப்பில் செய்யப்படும் தவறு, இவர்கள் பயன்படுத்தும் தாளின் அளவு மற்றும் ஓர இடைவெளிகளாகும் (பேஜ் சைஸ் மற்றும் மார்ஜின்ஸ்).தொழில்நுட்பம்கணினி மற்றும் அச்சுத்துறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் ஒன்றுக்கொன்று எதிரானவை. குறிப்பாக கணினி வரைகலையில் பயன்படுத்தப்படுவது மிகப் பெரிய பாதிப்பை தருகின்றவையாகும். கணினி வரைகலையைச் செய்து முடிக்க, கணினியில் பயன்படுத்தப்படும் கணினித் திரையில் காட்டப்படும் நிறங்கள் செயல்படுவது தொடு உணர்ச்சியால் அறியமுடியாத, ஒளியின் அடிப்படையிலாகும். ஆனால் அச்சுக்கலையில் பயன்படுத்தப்படும் நிறங்கள் பிக்மென்ட் என்ற திட அல்லது திரவப்பொருளின் அடிப்படையில் செயல்படுகின்றன.

நிறங்கள் மற்றும் அவற்றின் அமைப்பு

நிறங்கள் இயற்கையில் தோன்றுபவையே. வெவ்வேறு அலைவரிசை களில் இயற்கையாகத் தரப்படும் ஒளிக்கற்றைகளே நமது கண்களுக்கு வெவ்வேறு நிறங்களாக தெரிகின்றன. இந்த நிறங்கள் கணினித் திரையில் ஆர்ஜிபி என்ற அடிப்படைத் தொழில்நுட்பத்தில் செயல்படுகின்றன. அதாவது சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய நிறங்களே அடிப்படையாக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் கலவையிலேயே மற்ற நிறங்களான, மஞ்சள் உள்ளிட்டவை பெறப்படுகின்றன. எடுத்துக்காட்டாக 100% சிவப்பு நிறத்தையும், 100% பச்சை நிறத்தையும் கலந்தால் 100% மஞ்சள் நிறம் கிடைக்கின்றது. இது ஆர்ஜிபி நிற அடிப்படையில் நடக்கின்றது.
உங்களிடம் சிவப்பு மற்றும் பச்சை மை இருந்தால் கலந்து பாருங்கள். மஞ்சள் கிடைக்குமா? நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். 100% அடர்த்தியாக உள்ள இரண்டு நிறங்களைக் கலந்தால் 100% மென்மையான ஒரு நிறம் எப்படி கிடைக்கும். இது ஒரு பைத்தியக்காரத்தனமான முயற்சி அல்லவா? நிச்சயம் கிடைக்காது. ஆனால் கணினியில் உள்ள வரைகலை மென்பொருளில் தரப்பட்டுள்ள நிறப் பகுதியில் மேலே சொன்ன நிறங்களை கலந்து பாருங்கள். 100% மஞ்சள் நிறம் கிடைக்கிறது. இது எப்படி சாத்தியம்?கணினியில் கலக்கப்படுவது இரண்டு ஒளிக்கற்றைகள். சிவப்பு மற்றும் பச்சை என்பன இங்கு ஒளிக்கற்றைகளே. ஆனால் நாம் முயற்சிப்பது இரண்டு திரவப் பொருட்கள் அல்லது திடப்பொருட்கள். இவை சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் உள்ளவை; இவற்றை கலந்தால், கருமையான அடர்நிறத்தில் ஒரு நிறம் கிடைக்கும்; அவ்வளவுதான். கணினி தொழில்நுட்பம் இங்கு பயனளிக்காது. அப்படியென்றால் அச்சுத்துறைக்கான நிற முறை என்ன? எதை பயன்படுத்த வேண்டும்.

இங்கு பயன்படுத்தப்படுவது சிஎம்ஒய்கே என்று குறிப்பிடப்படும் சயான், மெஜன்டா, யெல்லோ மற்றும் பிளாக் என்ற நான்கு பிராசஸ் கலர்களின் கூட்டு ஆகும். இந்த நான்கு நிறங்களையும் (அச்சு மையாக) தேவையான அளவில் கலந்தால் மட்டுமே குறிப்பிட்ட நிறம் கிடைக்கும். எடுத்துக்காட்டாக பச்சை நிறம் கிடைக்க சயான் மற்றும் யெல்லோ ஆகியவற்றை கலக்க வேண்டும். இதுபோல இந்த நான்கு நிறங்களையும் சரியான விகிதங்களில் கலந்தால் 14.6 மில்லியன் நிறங்கள் பெற முடிகிறது என்று இதுவரையிலும் கண்டுபிடித்துள்ளனர்.

எனவே இந்த அடிப்படையை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். ஆர்ஜிபி முறையில் தரப்படும் படங்களை சிஎம்ஒய்கே முறைக்கு மாற்றினால் மட்டுமே அச்சிட முடியும்.ஆனால் இவ்வாறு மாற்றும்போது, நிற இழப்பு (கலர் லாஸ்) ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இது இயற்கையானது. யாரும் தெரிந்தோ தெரியாமலோ செய்வது அல்ல. நீங்களே உங்கள் கணினியில் ஒரு புகைப்படத்தைத் துவக்கிப் பாருங்கள். பொதுவாக இணையம் வழியாகக் கிடைப்பவை ஆர்ஜிபி முறையிலேயே இருக்கும். உங்கள் வரைகலை மென்பொருளில் இதனை சிஎம்ஒய்கே முறைக்கு மாற்றுங்கள். கணினி திரையிலேயே நிற இழப்பு உங்கள் கண் முன்பாக தெரியவரும்.

ஆர்ஜிபியில் கிடைக்கும் அதே நிற அமைப்பை அச்சில் (சிஎம்ஒய்கே) பெற முடியாது. எனவே இதனை மனதில் வைத்துக் கொண்டு உங்கள் வடிவமைப்பில் இறுதியாக அனைத்தையும் சிஎம்ஒய்கே முறைக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். ஆர்ஜிபியில் நீங்கள் உருவாக்கி அச்சிற்குக் கொடுத்தாலும், அச்சிடும்போது அங்கு மாற்றித்தான் ஆகவேண்டும். அதனால் நிற இழப்பு ஏற்படத்தான் செய்யும். எனக்கு ஒரிஜினல் நிறம் அப்படியே வேண்டும் என்று அடம்பிடிப்பது கூடாது. அது முடியாது.

எழுத்துருக்கள்

இணையம் வழியே ஏராளமான எழுத்துருக்கள் இன்று கிடைக்கின்றன. எல்லா மொழிகளுக்கான எழுத்துருக்களும் கிடைக்கின்றன. ஆங்கில மொழியைப் பொருத்தமட்டில் எண்ணிலடங்காத அளவிற்கு கிடைக்கின்றன.

தற்போது தமிழ் எழுத்துருக்களை இயக்குவதற்கான எளிமையான செயல் நிரலிகளும் (புரோகிராம்கள்) கூட இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. இணையத்தில் கிடைக்கும் எழுத்துருக்கள் எதற்கு பயன்படுத்தப்படுவதற்காக உருவாக்கப்பட்டவை? அவற்றின் செயல் திறன் என்ன? அவை எல்லா மென்பொருட்களிலும் இயங்கும் தன்மையுடன் உள்ளனவா? தற்போது இதனை பழகிவிட்டால் எப்போதும் இதனை தொடர்ந்து பயன்படுத்த முடியுமா? - இப்படி ஏராளமான கேள்விகள் கேட்டு அவற்றிற்கு சரியான, முறையான பதில் கிடைத்த பிறகுதான் அந்த எழுத்துருவை பயன்படுத்தத் துவங்க வேண்டும்.

ஆனால் நடப்பது என்ன? இன்று ஒரு எழுத்துரு முறை; நாளை ஒன்று - என்று மாற்றிக் கொண்டே இருக்கின்றனர். இந்த எழுத்துருக்களை மின்னஞ்சல், பிளாக் போன்ற இணையத்திற்கான செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்துவது நல்லது. ஆனால் இவற்றை பயன்படுத்தி புத்தக வேலைகளை உருவாக்குவதும், வரைகலையில் பயன்படுத்துவதும் நடைபெறுகிறது. இதன் விளைவு, தரமற்ற வடிவம், வரைகலை, எழுத்து அமைப்பு ஆகியவையே கிடைக்கின்றன. இணையத்தின் வழியே கிடைக்கும் தமிழ் எழுத்துருக்களின் தரம் என்னவாக உள்ளது? ஒற்றெழுத்துக்களின் புள்ளி, இகர எழுத்துக்களின் கொம்பு ஆகியவை சரியான இடத்தில் நிறுத்தப்படுவது இல்லை. சற்றே விலகியே நிறுத்தப்படுகின்றன. எழுத்துக்களின் (அகலவசத்தில்) தடிமன் சரியான விகிதத்தில் இருப்பது இல்லை. ஒரே வகை எழுத்துருவில், தடிமனான (போல்டு), சாய்வான (இட்டாலிக்) எழுத்து வடிவங்கள் கிடைப்பதில்லை. இதனால் வடிவமைப்பில் எழுத்து வேறுபாட்டைக் காண்பிக்க வேறு எழுத்துருவை மட்டுமே பயன்படுத்த வேண்டியுள்ளது.

இணையத்தில் கிடைக்கும் எழுத்துருக்கள் பெரும்பாலும் அதிகபட்சமாக எம்எஸ் வேர்டு அப்ளிகேஷனில் மட்டுமே செயல்படுகின்றன. பேஜ்மேக்கர், கோரல்டிரா உள்ளிட்ட கணினி வரைகலை மென்பொருட்களில் செயல்படுவது இல்லை. அப்படியே ஒரு சில எழுத்துருக்கள் செயல்பட்டாலும், அவற்றின் அமைப்பு, வடிவம் ஆகியன சரியான முறையில் கிடைப்பது இல்லை. ஒற்றெழுத்துப்புள்ளிகளும், இகர எழுத்துக்களின் கொக்கிகளும் நகர்ந்து காணப்படுகின்றன. வரைகலைக்கான வடிவங்களாக இவை காணப்படுவது இல்லை. இவற்றையெல்லாம் சரிசெய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இணையத்தில் கொடுக்கப்படுபவை இணையப் பயன்பாட்டிற்கானவையே; அவற்றை அச்சிற்கு பயன்படுத்தினால் சரியான விளைவு கிடைக்காது. நூலாசிரியர்கள் தட்டச்சு செய்வதற்கு இவற்றை பயன்படுத்தலாம். இதனை புத்தகமாக மாற்றும்போது, அச்சகதாரர் அல்லது கணினி வரைகலைப் பகுதியில் உள்ளவர்கள் விருப்பத்திற்கு விட்டுவிடுவது நல்லது. அச்சிற்குக் கொண்டு செல்லப் போகின்றீர்கள் என்றால், அதற்கான சரியான, தரமான எழுத்துருக்களை பயன்படுத்துவது முறையாகும்.

தாள் அளவு

மூன்றாவதாக வடிவமைப்பில் செய்யப்படும் பெரிய தவறு, பக்க அளவு தேர்வு செய்வதாகும். கணினியில் பக்க வடிவமைப்பிற்காக வேர்டு, பேஜ்மேக்கர், கோரல்டிரா போன்ற மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. கல்வியாளர்கள் பெருமளவு பயன்படுத்துவது எம்எஸ் வேர்டு ஆகும். இதனைத் துவக்கினால் தயார்நிலையாக ஒரு பக்கம் தரப்படுகிறது. பொதுவாக இது லெட்டர் என்ற அளவில் உள்ளது. அதாவது இந்த லெட்டர் என்ற தாளின் நீளம் மற்றும் அகலமானது 215.9 X 279.4 ஆகும். அச்சுத்துறையில் பயன்படுத்தப்படும் இதற்கு இணையான அளவுள்ள தாளின் நீளம் மற்றும் அகலம் ஏறக்குறைய இதற்கு இணையாகவே உள்ளது. அதாவது டெமி 1/4 என்ற அளவுள்ள தாளின் நீளம் மற்றும் அகலம் 215 285 ஆகும்.

இந்தத் தாளில் அச்சுப்பரப்பு என்பது, 180 X 220 ஆகும். இதுபோக மீதி உள்ளவை தாளின் ஓர இடைவெளியாகக் (மார்ஜினாகக்) கொடுக்கப்படுகின்றன. அதாவது உச்சியில் - 38.5, அடியில்- 38.5, இடது - 15 மற்றும் வலது - 15 மிமீ டைவெளியாகக் கொடுக்கப்படுகின்றன.

இதனால் தாளின் மையப்பகுதியே அச்சிற்கு பயன்படுத்தப்படுவதாக அமைகிறது. ஆனால் வேர்டு மூலம் புத்தகப்பக்கங்களை உருவாக்குபவர்கள் இதனையும் மாற்றுவதில்லை.

தயார் நிலையில் தரப்படும் அளவுகளையே பயன்படுத்துகின்றனர். சரியாகச் சொல்லுவதென்றால் இதனை மாற்ற வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. தயார் நிலையில் கணினியைப் பொறுத்து இந்த அளவு மாறுபடுகிறது. அருகில் படத்தில் நமது கணினியில் தரப்பட்டுள்ள அளவுகளை கவனியுங்கள். இத்துடன் அல்லாமல், அச்சிற்கு என்று வரும்பொழுது நாம் மேலே சொன்ன அளவுகளும் கொடுக்கக் கூடாது. குறிப்பாக பாலிமாஸ்டர் பயன்படுத்தி அச்சிடும்போது, தாளின் மேல்பகுதியில் குறைந்தபட்சம் 35 முதல் 55 மிமீ இடைவெளி தரப்பட்டிருக்க வேண்டும். இது இல்லையென்றால் அச்சிட முடியாது. ஆனால் இந்த அளவைக் கொடுத்து லெட்டர் அளவு தாளில் வடிவமைப்பு செய்ய முடியாது. எனவே, தாளின் அளவு லீகல் என்பதாகத் தரப்பட வேண்டும். இந்த லீகல் என்ற தாளின் நீளம் மற்றும் அகலமானது 215.9 X 355.6 ஆகும். இதில் தான் அச்சுப்பரப்பு மற்றும் ஓர இடைவெளிகள் சரியானதாகக் கொடுக்க முடியும்.

எனினும் வடிவமைப்பு செய்து முடித்துவிட்டு, லேசர் பிரிண்டரில் அச்சு எடுத்துப்பார்க்க இந்த அளவு உதவாது. அதற்கு லெட்டர் அல்லது ஏ4 அளவுதான் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனவே, லெட்டர் அல்லது ஏ4ல் வடிவமைப்பை முடித்து ஆசிரியர்கள் புத்தகவேலையை அச்சு எடுத்து படித்து சரி செய்து கொடுத்தாலும், அச்சிடுவதற்காக அந்த வடிவமைப்பை லீகல் அளவு தாளுக்கு மாற்றியே ஆகவேண்டும். இவ்வாறு மாற்றும்போது கொடுக்கப்பட்டுள்ள வடிவமைப்பில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். அத்துடன் இதற்காக ஒரு தொகை கட்டணமாகவும் கொடுக்கப்பட நேரிடும்.

ஆசிரியர்கள் உருவாக்கும் அத்தனையையும் அப்படியே அச்சிற்குக் கொண்டு செல்ல முடியாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும், நீங்கள் உருவாக்கியது என்பதால் உங்கள் வடிவமைப்பு முக்கியமா அல்லது அச்சிட்டபிறகு புத்தகம் படிக்கக் கூடியவிதத்தில் இருக்க வேண்டும் என்பது முக்கியமா என்பதை முடிவு செய்து கொள்ளவேண்டும்.

முன்பு தாள்களில் கைகளால் எழுதிக் கொடுத்தவை, அல்லது தட்டச்சு இயந்திரங்களின் உதவியால் தயாரித்துக் கொடுத்தவை - என்பவையே இன்று கணினியில் உருவாக்கிக் கொடுக்கப்படுகின்றன. ஒருவருக்கு உதவிய கணினி அப்படியே மற்றொரு பகுதியிலும் உதவாது என்பதையும் மனதில் கொள்ளவும். நாம் தான் கணினியில் உட்செலுத்திவிட்டோமே, இனி நேரடியாக அச்சிற்குக் கொண்டு செல்வதுதானே என்பது கிடையாது; முடியாது.

படங்களின் தரம் மற்றும் தொடர்பு

வடிவமைப்பாளர் மற்றும் அச்சகதாரர் சந்திக்கும் அடுத்த தொல்லை படங்களுக்கான தொடர்பு. மீண்டும் படங்களைப் பற்றியே சொல்ல வேண்டியுள்ளது. ஆனால் இந்த முறை நிற அமைப்பு அல்லாமல், அவற்றிற்கான தரம் மற்றும் கணினித் தொடர்பு பற்றிச் சொல்ல வேண்டியுள்ளது.

இணையத்திலிருந்து கிடைக்கும் படங்கள் தரம் குறைவாகவே இருக்கும். அது என்ன தரம்? பொதுவாகவே, படங்களை, குறிப்பாக புகைப்படங்களை அவை உருவாக்கப்பட்ட அளவில் அல்லது சிறிது அளவில் குறைத்து பயன்படுத்தலாம். எந்த நிலையிலும் அளவை பெரிதுபடுத்தக் கூடாது. பெரிதுபடுத்தினால் தரம் நிச்சயம் குறையும். அத்துடன் இந்தப் படங்களின் தரத்தை அளவில் குறிப்பிட என்ற அலகை பயன்படுத்துகின்றனர். ஒரு அங்குலத்தில் கொடுக்கப் பட்டிருக்கும் புள்ளிகளின் எண்ணிக்கையில் (டாட்ஸ் பெர் இன்ச்) படத்தின் தரம் முடிவு செய்யப்படுகிறது.

இணையத்தில் கொடுக்கப்படுபவை பெரும்பாலும் 72 டிபீஐ மட்டுமே இருக்கும். ஆனால் அச்சிற்கு 300 டிபீஐ இருந்தால்தான் நல்ல தரமான படம் என்று கொள்ளுவார்கள். இதற்குக் குறைவான அளவு உள்ள படங்கள் நிச்சயம் தரம் குறைவாகவே அச்சில் கிடைக்கும். குறிப்பாக பலவண்ண வேலைகளில் பயன்படுத்தப்படும் வண்ணப்படங்கள் மோசமாகவே காட்சி தரும். இதனை தவிர்க்க இயலாது. அருகே படத்தில் இரண்டு தரங்களையும் காண்க. 72 டிபீஐயில் படம் தெளிவற்று காணப்படுவதை கவனிக்க. 300 மற்றும் 72 டிபீஐ படங்களையும் ஒரே அளவிற்கு (நீளம் மற்றும் அகலத்தில்) மாற்றியுள்ள நிலையில் இப்படித்தான் காண்பிக்கப்படும். 72டிபீஐ அளவுள்ள இதே படத்தை சிறியதாக்கினால் சற்றே தெளிவாக இருப்பதையும் படத்தில் காண்க. லார்ஜ் ஃபார்மேட் குறிப்பிட்டு தேடி எடுக்கப்படும் படங்கள் அச்சிற்கு ஏற்றவையாக இருக்கின்றன.

எனவே மீண்டும் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்; குறைவான டிபீஐ கொண்ட படத்தை அதிக டிபீஐக்கு மாற்ற முடியாது.

அடுத்ததாக கவனிக்கப்பட வேண்டியது படங்களுக்கான தொடர்பு (லிங்க் - ) ஆகும். குறிப்பாக வேர்டு அப்ளிகேஷனில் படங்களை நேரடியாக இன்சர்ட் கட்டளைமூலம் நிறுத்திவிடுகின்றனர். ஆனால் அச்சிற்குக் கொடுக்கும்போது இணையத்திலிருந்து அல்லது வேறு எந்தவகையிலாவது பெற்ற அந்தப் படங்களை தனியே இணைத்துக் கொடுப்பது இல்லை. வெறும் வேர்டு ஃபைலை மட்டும் அச்சிற்கு அனுப்புகின்றனர். இந்த வேர்டு ஃபைலை அப்படியே பயன்படுத்தினாலும், அல்லது வேறு பக்க வடிவமைப்பு அப்ளிகேஷனுக்கு மாற்றினாலும், அந்த படங்களின் தொடர்பு கொடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் படத்தின் தரத்தில் மேலும் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வேர்டு பக்கங்களில் நிறுத்தப்பட்டுள்ள படத்தை செலக்ட் செய்து, காப்பி பேஸ்ட் கட்டளை மூலம் பயன்படுத்தச் சொல்லுவது சரியான வழி அல்ல. அதனால் தொடர்பும் கிடைப்பது இல்லை; தரத்திலும் மேலும் சிறிது இழப்பு ஏற்படும்.

எனவே பயன்படுத்தியுள்ள படங்களை தனி ஃபைலாக, தனியான ஒரு ஃபோல்டரில் நிறுத்திக் கொடுத்தால், அச்சிற்காக வடிவமைப்பு செய்யும்போது பயன்படுத்த முடியும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை

இன்றைய அறிவியலால் பல செயல்பாடுகள் திறந்துவைத்துள்ள இரகசியங்களாகப் போய்விட்டன. இது தவிர்க்க இயலாததும் கூட. ஆனால் இந்த இரகசியங்களை முழுமையாக புரிந்து கொண்டு செயல்பட்டால் அனைவருக்கும் பயன்கிட்டும்.

நன்றி : தமிழ் கம்ப்யூட்டர், டிசம்பர் 1-15, 2009