1 பிப்ரவரி, 2012

கணினி வரைகலை - பயிற்சியும் வேலை வாய்ப்பு

கணினி வரைகலை - பயிற்சியும் வேலை வாய்ப்பு

தொடக்கம்


கற்காலத்தில் குகைகளில் வசித்த போதே குகைச் சித்திரங்களாக வரைந்து தகவல் பரிமாற்றத்தை மனித இனம் துவக்கியது. சிந்தனை வளர்ந்து செயலாக மாறியபோது ஏராளமான வெளிப்பாடுகள் கண்டுபிடிப்புகளாகக் கிடைத் தன. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்திய நாகரீகம் முதன்முதலாக குறியீடுகளாக எழுத்துக்களை அறிமுகம் செய்தது.


வளர்ந்த நதிக்கரை நாகரீகங்கள் வாய்வழி ஓசைகளை எழுத்துக்களாக வடிவமைத்தன. எண்ணங்களை எழுத்துக் களாகப் பதிவு செய்ய பனை ஓலை, சுடுகற்கள், பாறைகள், துணி, மரத் துண்டுகள் போன்ற அன்றைய நாட்களில் அருகில் எளிதில் கிடைத்தப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.


சீனர்கள் கண்டுபிடித்த காகிதம் அச்சுக்கலை உருவாகி வளர வழிசெய்து. ஒட்டுமொத்தமாக மரக்கட்டைகளில் செதுக்கப்பட்டு பக்கங்கள் அச்சிடப்பட்டன. 15ஆம் நூற்றாண்டு வரையிலும் புழக்கத்திலிருந்த இந்த முறை, ஜெர்மானிய கலைஞர் ஜேஹன்னஸ் கூட்டன்பர்க் என்பவரின் ஈடுபாட்டால் மாற்றம் அடைந்தது. அவர் கண்டுபிடித்து உலகிற்களித்த பிரித்தெடுத்து அடுக்கும் அச்சுமுறை சுமார் 500 ஆண்டு காலம் அச்சுத்துறைக்கு மிகப் பெரிய உதவியாக அமைந்தது. லெட்டர் பிரஸ் என்று குறிப்பிடப்படும் இந்த அச்சுக்கோர்க்கும் முறை இன்றும்கூட புழக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


கணினியின் வருகை


அச்சுத்துறையில் ஏற்பட்ட மாற்றங்களினால் அதன் மூலம் கிடைத்த புத்தகங்கள் எளிய மக்களையும் சென்றடைந்தது. அதனால் அறிவுப் பரிமாற்றம் விரைவாக நடந்தது; ஆராய்ச்சிகள் பெருகின; அறிவியல் வளர்ந்தது; அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏராளமாக வெளிவந்தன.


கணக்கியலின் வளர்ச்சியால் கணினி இயல் தோன்றியது. மனித அறிவிற்கும் ஆற்றலுக்கும் உதவும் விதமாக கணினி தொழில்நுட்பம் எல்லாத்துறைகளிலும் பரவியது; பலன் தந்தது. 80களின் இறுதியில் டெஸ்க் டாப் பப்ளிஷர் என்ற வகைப்பாட்டில் கணினிகள் அச்சுத்துறைக்கு அறிமுகம் ஆயின.


அச்சுக்கோர்ப்பாளர், அச்சிடுபவர், வரைகலைஞர், வடிவமைப்பாளர், வெட்டி ஒட்டுபவர், பிழை திருத்துநர், ஓவியர் என்று பல்வேறு நபர்களின் கூட்டு முயற்சியாலும், உழைப்பாலும் செய்யப்பட்ட வேலைகள், கணினி வரைகலைஞர் என்ற ஒரே ஒரு நபரால் உருவாக்கப்படும் நிலை ஏற்பட்டது.


வரைகலையில் கணினிகள்


80களில் வெளிவந்த கணினிகளில் கொள்ளவு என்பது வெறும் 80 எம்பியில் மட்டுமே இருந்தன. ஆனால் அவற்றுடன் ஒப்பிடமுடியாத அளவிற்கு இன்று கணினிகள் கொள்ளவிலும், ஆற்றலிலும், செயல்பாட்டிலும், கொடுக்கும் வெளிப்பாடுகளிலும் பெரிய மாற்றங்களுடன் கிடைக்கின்றன.


உடல் போன்று திகழும் கணினிகளுக்கு உயிராக அமைந்துள்ளவை, கண்ணால் பார்க்க முடியாத, தொட்டுணர முடியாத மென்பொருட்களே. இந்த மென்பொருட்களின் தன்மையினாலேயே அச்சுத் துறையில் வடிவமைப்பிற்காக பயன்படுத்தப்படும் கணினிகளுக்கு டெஸ்க் டாப் பப்ளிஷர் என்ற சிறப்புப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் அவை பெரிசனல் கம்ப்யூட்டர் - பீசி என்றே குறிப்பிடப்படுகின்றன.


கணினி வரைகலை


அச்சு, விளம்பரம், பதாகைகள், புத்தகப் பதிப்பு மற்றும் ஒளிப்படத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் அடிப்படையாகத் திகழ்வது வரைகலை வடிவமைப்பாகும். பெரும்பாலும் வெறும் எழுத்துக் களால் உருவாக்கப்படும் புத்தகங்கள் உருவாக்கம் முதல், எழுத்துக்கள், வண்ணங்கள், ஒளிப்படங்கள் போன்றவற்றை பயன்படுத்தி மிகவும் சிக்கலான முறையில் உருவாக்கப்படும் பதாகைகள் வடிவமைப்பு வரையிலும் கணினியும் அதில் நிறுவப்படும் மென்பொருட்களுமே பயன்படுத்தப்படுகின்றன.


காகிதம், அட்டை, வண்ணக்கலவைகள், தூரிகை, எழுதுகோல்கள், கத்தி, கத்தரிக்கோல், அழிப்பான் உள்ளிட்ட வரைகலைக் கருவிகள் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுவிட்டன. இத்தனை கருவிகள் செய்த வேலைகளை கணினியுடன் இணைக்கப்படுகின்ற மவுஸ் என்றழைக்கப்படும் சுட்டுக்கருவிகள் துல்லியமாக செய்து முடிக்க உதவுகின்றன.


கணினி வரைகலை மென்பொருட்கள்


கணினி வரைகலை என்பது பல்வேறு வகைகளில் உள்ளது. புத்தக வடிவமைப்பு என்பது எழுத்துக்கள் அதிகமாகவும குறைவான படங்களுடனும் உள்ளது. புகைப்படத்துறை என்பது இதற்கு எதிர்மறையாக செயல்படுகிறது. அங்கு எழுத்துக்கள் என்பது அரிதாக உள்ளது. பதாகைகள் வடிவமைப்பு என்பதோ எழுத்துக் கள், வண்ணங்கள், கோட்டுப்படங்கள், ஒளிப்படங்கள் என்று பல தரப்படவைகளின் கலவையாக உள்ளது.


இப்படி பலதரப்பட்ட செயல்பாடுகளைக் கொண்டுள்ளதால் கணினி வரைகலையில் பல்வேறு மென்பொருட்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. இன்டிசைன், போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர், கோரல்டிரா என்ற பல்வேறு மென்பொருட்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இவையெல்லாம் விலை கொடுத்து வாங்க வேண்டியவையாகும்.


இவையல்லாமல், இலவசமாக, இவை போன்றே செயல்பாடுகளைக் கொண்ட மென்பொருட்களும் இணையத்தில் கிடைக்கின்றன. தேவையெனில் இவற்றை பதிவிறக்கம் செய்து நமது கணினிகளில் நிறுவி பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேவையும் பயன்பாடும்


எழுத்து என்பதில் புழக்கத்தில் உள்ள எல்லா இடங்களிலும் இன்று கணினி வரைகலை என்பது மிகவும் தேவையான ஒன்றாகிவிட்டது. சிறிய துண்டுப் பிரசுரங்கள், அறிவிப்புகள் முதல் பல நூறு பக்கங்களைக் கொண்ட புத்தகம் வரையிலும் இன்று கணினிகள் வழியாகவே உருவாக்கப்படுகின்றன.


இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அறிவுடன் தொடர்புகொண்ட ஒவ்வொரு இடத்திலும் கணினி வரைகலையின் வெளிப்பாடு உள்ளதைப் பார்க்க முடிகிறது. இதனால் இதன் பயன்பாடு என்பது தவிர்க்க இயலாதவை என்ற பட்டியலில் சேர்ந்துவிட்டது என்றும் கூறலாம்.


பயிற்சி


இந்தக் கணினி வரைகலை என்பது பல்வேறு தரத்தில் உள்ளது. அடிப்படை என்று பார்த்தால் கணினிக்குள் எழுத்துக்களை உள்ளீடு செய்யும் செயல் என்பதாகும். இதற்குக் குறிப்பிட்ட மொழியில் தட்டச்சு செய்யத் தெரிந்திருந்தாலே போதும். அதே சமயம் சிக்கலான வடிவமைப்பைக் கொண்டுள்ள வேலைகளை எடுத்துப்பார்த்தால், அவற்றில் எழுத்துக்களை உள்ளீடு செய்வது மட்டுமல்லாது வேறு பல செயல்பாடுகளும் இருப்பதை அறியலாம்.

கற்பனை வளத்துடன், எழுத்துரு அறிவு, வண்ணங்கள் மற்றும் அவற்றின் கலவை முறைகள் பற்றிய அறிவு, வடிவமைப்பு, படங்கள் மற்றும் ஒளிப்படங்கள் பற்றிய அறிவு போன்றவை அந்தக் கணினி வரைகலை வடிவமைப்பாளருக்கு இருந்திருப்பதை அறியலாம்.
ஆம், தட்டச்சு என்பதுடன் ஈடுபாட்டுடன் கூடிய கற்பனை வளமும், கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தால் கணினி வரைகலையில் சாதனைகள் புரியலாம்.

இந்தக் கணினி வரைகலையில் பயிற்சி எடுப்பதற்கு, கல்வியறிவு - அதாவது பள்ளி, கல்லூரிகளில் படித்துப் பெற்ற அறிவு - என்பது வரைமுறைக்கு உட்பட்டது அல்ல. எழுதப் படிக்கத் தெரிந்திருந்தாலே போதும்.


ஆங்கில அறிவும், கணினித் தொழில்நுட்பமும் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அடிப்படை ஆங்கிலச் சொற்களும், ஆங்கில எழுத்துக்களும் படிக்கத் தெரிந்திருந்தால் மட்டும் போதும். இதுவும் வரைகலைஞர் பயன்படுத்தும் மென்பொருளின் அடிப்படையில் மட்டுமே தேவையாகும்.


கணினி தொழில்நுட்பம் என்பதும் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. சமையல் செய்ய விரும்புவர்க்கு, விவசாயமோ, விவயசாத் தொழில்நுட்பமோ தெரிந்திருக்க வேண்டியதில்லை அல்லாவா! விளைந்த பொருட்களின் தன்மையும் பயன்பாடும் பற்றி அறிந்திருந்தால் போதும் தானே.


வேலை வாய்ப்புகள்


கட்டுப்பாடற்ற சம்பளத்தைக் கொடுப்பதாகக் கூறப்படும் கணினித்துறைக்குள் நுழைவதற்கு அத்தனை பேரும் விரும்புகின்ற காலம் இது. ஆனால் கணினித் தொழில்நுடப் பிரிவுகளில் மேல்நிலை படிப்பு முடித்தவர்கள் அனைவருமே அந்த உச்சியை அல்ல, துவக்கத்தைக்கூட அடைய முடிவதில்லை.
ஆனால் அந்த உச்சியை அடைந்துள்ள மிகக் குறைந்த சதவீத மக்களைப் பார்த்து எல்லோரும் ஆசைப்படுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
கணினியில் மென்பொருள்துறை தவிர்த்து மேலும் பல பகுதிகள் உள்ளன. அவற்றில் ஒன்றான இந்த கணினி வரைகலைப் பகுதியில் தேவையும் வாய்ப்பும் மிக அதிகமாகவே உள்ளது.

தமிழ் மொழியில் தட்டச்சு மட்டுமே பழகியுள்ளவர்கள்கூட இந்தத் துறைக்குள் எளிதாக நுழைந்து விடலாம். சரியாகச் சொல்லப்போனால் இவர்களுக்கு வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளது. பிறகு தங்களது முழுமையான ஈடுபாட்டுடன் இதில் சிறப்பாக செயல்படலாம்.

பெருநகரங்களில் மட்டுமல்லாது சிறிய கிராமங்களிலும் கணினி வரைகலைஞர்களின் தேவை அதிகமாகவே உள்ளது. கிராமங்களில் இதனை பயிலுபவர்களுக்கு அங்கேயே வேலை வாய்ப்பு கிடைக்கிறது; சொந்தமாக தொழில் துவங்கலாம். அல்லது அருகில் உள்ள நகரங்களில் வேலை கிடைக்கிறது.

பயிலும் முறைகள்


இந்தக் கணினி வரைகலையை மிகவும் எளிதாகப் பழக முடிகிறது. அதற்கான வழிமுறைகள் :

1. தமிழ் தட்டச்சு மட்டும் அறிந்துள்ள நிலையில் தரவு உள்ளீடு செய்யும் பணியில் சேர்ந்து, படிப்படியாக கணினி வரைகலையைப் பழகிக் கொள்ளலாம். இதற்கு வேலை செய்யும் இடத்தைப் பொறுத்து 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரையிலும் ஆகலாம்.

2. கணினி வரைகலையைப் பயிற்றுவிக்கும் தரமான பயிலகத்தில் சேர்ந்து பழகிக் கொள்ளலாம். எனினும் சொல்லிக் கொடுக்கும் பயிலகத்தின் தரத்தைப் பொறுத்து பயிலுபவரின் செயல்பாடுகள் அமையும். 3 முதல் 6 மாதங்களுக்குள் தேர்ச்சி பெறலாம்.

3. எளிய தமிழில் கணினி வரைகலையைச் சொல்லித்தரும் குறுவட்டுக்கள் கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்திப் பழகலாம். பயிலுபவரின் ஈடுபாட்டைப் பொறுத்து கால அளவு மாறுபாடு அடைகிறது.

4. எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் மூலமாகவும் கணினி வரைகலையைப் பயிலலாம். இதுவும் மேலேச் சொன்னபடி காலவரையறைக்கு உட்பட்டது அல்ல.

பயில வேண்டும் என்ற ஆர்வம், முயற்சி இருந்தால் இந்த கணினி வரைகலையைப் பயின்று விடலாம். இன்று நீங்கள் படிக்கும் இந்தப் புத்தகத்தை உருவாக்கியதும் சில கணினி வரைகலைஞர்களின் உழைப்புதான் என்பதை அறிவீர்களா!

தயக்கம் வேண்டாம்


கணினி தொழில்நுட்பம் என்றதும் நம்மவரிடையே ஒரு தயக்கம் உள்ளது. நேரடியாக கணினி தொழில்நுட்பம் அல்லாமல், கணினியை பயன்படுத்தி செயல்படும் கணினி வரைகலை போன்ற பல துறைகள் உள்ளன. எனினும் இந்த கணினி வரைகலையைப் பொறுத்தமட்டில், விருப்பத்துடன் கூடிய எவர் வேண்டுமானாலும் நுழையும் அமைப்புடன் திகழுகின்றது; அத்துடன் ஈடுபாட்டுடன் செயல்படுபவர்களுக்கு உறுதியான வேலை வாய்ப்பையும் அதனைத் தொடர்ந்து சுயமாகத் தொழில் தொடங்கும் நல்ல வாய்ப்பையும் தருகின்றது.

10வது, +2 படித்தவர்கள் மட்டுமல்ல பட்டதாரிகளும்கூட இந்தப் பகுதியில் சிறப்பாக செயல்பட முடிகிறது.

தமிழ் மட்டுமே அறிந்த நாம் கணினி வரைகலையில் வெற்றி பெற முடியுமா? என்ற தயக்கமின்றி துவங்குங்கள். தொழில்நுட்பமும், அறிவியலும், வாணிபமும் தமிழருக்குப் புதியதன்று. மற்றவர்கள் கற்கத் துவங்கியபோது நாம் கற்றுக் கொடுக்கும் நிலையிலேயே இருந்துள்ளோம். எந்தத் தொழில்நுட்பத்தையும் எளிதில் கற்கும் ஆற்றல் நமக்குண்டு. அத்துடன் 64 கலைகளை வளர்த்துவரும் நாடு இது. இந்தக் கலையையும் சிறப்பாக வளர்த்து வருகிறது.

விருப்பத்துடன் வாருங்கள்; சிறப்பாக செயல்பட்டு வளரலாம்; வாழ்த்துக்கள்.


ஜெ. வீரநாதன்
பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்

மின்னஞ்சல் : veeranathan@yahoo.com

நன்றி : தமிழர் கண்ணோட்டம், பொங்கல் மலர், ஜனவரி 2012